PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சொல்
 
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர். 
 
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.
 
எ.கா.
  
பூ , ஆ , தீ , வா , போ , தா
  
' பூ மலர்ந்தது ' ' மாடு புல் தின்றது '
 
மேலே உள்ள எடுத்துக்காட்டில் தனி எழுத்தும், பல எழுத்துகள் சேர்ந்த வந்த சொல்லும் உள்ளன. இவை பொருள் தருகிறதல்லவா? இந்தச் சொல்லானது ,
 
இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும்.
 
இரு திணை- உயர் திணை, அஃறிணை
 
ஐம்பால் - ஆண்பால் , பெண்பால் , பலர்பால், ஒன்றன் பால் , பலவின்பால் .
 
மூவிடங்களிலும்வரும். தன்மை , முன்னிலை , படர்க்கை.
 
உலக வழக்கிலும்( பேச்சு வழக்கு ), செய்யுள் வழக்கிலும்  வரும்.
 
வெளிப்படையாகவும்,குறிப்பாகவும்  விளங்கும்.
மூவகை மொழி
1) தனிமொழி
  
2) தொடர்மொழி
 
3)பொதுமொழி
 
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொருளனபொது இருமையும் ஏற்பன.  (நன்னூல் - 260)
1) தனிமொழி :
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
 
பிரிக்க முடியாத பகாப்பதம் அல்லது பிரிக்கக் கூடிய பகுபதமாக இது அமையும்.
 
எ.கா.
  
கண் , படி  -  பகாப்பதம்
  
கண்ணன் , படித்தான் - பகுபதம்
2) தொடர்மொழி :
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
 
எ.கா . கண்ணன் வந்தான். மலர் வீட்டுக்குச் சென்றாள்.
3) பொதுமொழி :
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
 
எ.கா.
  
எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்
 
வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
 
இவையே எள் + து எனவும் ,
 
வேம் + கை எனவும்
 
தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும்.
 
இவை இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.