PDF chapter test TRY NOW

புதுக் கவிதை - இன்பத்தமிழ்
                                                                                            - பாரதிதாசன்.
3 (2).png
நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.
 
Padal.jpg
 
சொல்லும் பொருளும்:
 
நிருமித்த - உருவாக்கிய
விளைவு - வளர்ச்சி
சமூகம் - மக்கள் குழு
அசதி - சோர்வு
வான் - வானம்
இணை - சமம்
சுடா் - ஒளி
 
எதிா்ச்சொல்:
  
இளமை x முதுமை
புகழ் x இகழ்
அசதி x சுறுசுறுப்பு
ஒளி x  இருள்
இன்பம் x துன்பம்
அமுதம் x விடம்
 
பாடலின் பொருள்:
 
தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
 
நூல்வெளி:
  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
  • பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
  • எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
  • இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - தமிழ்த்தேன்(ப.எண். 1-4) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.