PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
        கனவு பலித்தது பாட பொருண்மையானது கடிதப் போக்குவரத்தின் வாயிலாக, நிகழ் காலத்தில் கடந்த கால கடிதப் போக்குவரத்தினை நினைவுகூர்ந்து பின் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தடைவது போலக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
        இங்கு கதைக்குள் கதைபோலக் கடிதத்திற்குள் கடிதம் இடம்பெற்றுள்ள உத்திமுறையை நாம் நோக்க வேண்டும்.
       கடிதத்திற்குள் இன்சுவை 12 மே 2017இல் மதுரை நிகழ்காலத்திலும் கடந்த காலம் 04 மார்ச் 2006இல் நறுமுகை சென்னையிலிருந்தும் எழுதுவதாகத் தரப்பட்டுள்ளது. கால இடைவெளி பதினொன்று ஆண்டுகள்.
        இன்சுவை 12 மே 2017 அன்று எழுதப்பட்ட கடிதத்தில் நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரப் போவதாக எழுதுகிறாள். ஆறாம் வகுப்பில் படிக்கும் 11 வயது கொண்ட இன்சுவைக்கு அறிவியல் அறிஞராகக் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது. 11 ஆண்டுகள் கடந்து இக்கனவு நிறைவேறுவதாகப் பதிவு செய்யும் பொருத்தப்பாட்டை நாம் கவனிக்க வேண்டும்.   
        அவள் எழுதிய கடிதத்திற்கு மறுமடலைத் தொடர்ந்து பல்வேறு கடிதங்களை எழுதுகிறாள் அத்தை நறுமுகை. இக்கடிதங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அதனை வாசித்து வாசித்து தன்னை வளர்த்துக் கொள்கிறாள். அவளது வளர்ச்சிக்கு கடுமையான உழைப்பும்அத்தையின் கடிதங்களும்தான்.
        அறிவியல் துறையில் சாதித்தவர்களும், பிற துறைகளில் தடம் பதித்தவர்களும் தமிழ்வழியில் கல்வி கற்றவர்களே. நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் அறிவியல் கூறுகள் இடம்பெற்றுள்ளன.
        தமிழ்மொழியில் முதன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஐம்பூதங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வகைப் பாகுபாடு பற்றித் தொல்காப்பியர் பதிவு செய்துள்ளார்.
        கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின் அது மழை பொழியும் என்னும் அறிவியல் கருத்தை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார் நாற்பது, திருப்பாவை போன்ற இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.
        நீர் (திரவ) பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அதன் அளவைச் சுருக்க முடியாது என்று ஔவையார் கூறுகிறார்.
பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நூல்கள் அறுவை மருத்துவச் செய்தியை நமக்கு அளிக்கின்றன.
        தூரத்தில் உள்ள பொருளை, உருவத்தை அருகாமையில் காட்டச் செய்ய இயலும் என்பது அறிவியல் விஞ்ஞானி கலிலீயோவின் கூற்று. இக்கூற்றைக் கபிலர் தான் எழுதிய திருவள்ளுவமாலையில் குறிப்பிட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது.
 சாதனையாளர்களை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு நூலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ஏராளமான நூல்களை வாசித்துச் சுய சிந்தனையைப் பெருக்கினால் இயல்பாகவே அறிவியல் மனப்பான்மை வளரும்.
        தமிழாலும் தமிழராலும் அனைத்துத் துறையிலும் வெற்றி பெற முடியும். நீயும் வெற்றி பெறுவாய். உனது கனவு நனவாகும் என்று கடிதம் மூலம் கூறியதை மீண்டும் நினைவுபடுத்துகிறாள். இந்நினைவூட்டல் கடிதம் கடிதத்திற்குள் கடிதமாகக் காட்சியளிக்கிறது.
        இறுதி முடிப்பாக, அத்தை கூறியபடி பல நூல்களையும் இலக்கியங்களையும் வாசித்தது மட்டுமல்லாமல் அத்தையின் அன்பும்தான் நான் வெற்றியடைய காரணம் என்று நன்றி உணர்வோடு கூறுகிறாள்.
        இச்சமூகத்திற்கு இயன்ற நன்மைகளைச் செய்வதாக உறுதி கொள்ளும் வகையில் கடிதத்தை முடிக்கிறாள்.
 
#Writing_Drinking.png