PDF chapter test TRY NOW

படித்தான், படித்த, படித்து - ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை.
 
இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
 
இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

பெயரெச்சம்
 
படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.

இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
 
(எ.கா)
  
பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் - எதிர்காலப் பெயரெச்சம்

தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சங்கள்
எழுதியகடிதம் - இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
 
இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

சிறியகடிதம் - இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ. காலத்தையோ அறிய முடியவில்லை.
 
பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது.
 
இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப்பெயரெச்சம் எனப்படும்.