PDF chapter test TRY NOW

எழுத்து மாற்ற அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு
1. இயல்பு  புணர்ச்சி
 
2. விகாரப்  புணர்ச்சி என இரண்டு வகையாகப் பிரிக்கிறார் நன்னூலார்.
 
இயல்பு புணர்ச்சி நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களிலும் எவ்வித எழுத்து மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
அஃதாவது அடுத்துக் கூறப்படும் விகாரப் புணர்ச்சிக்கு உரிய விகார வகைகள் எதனையும் அடையாமல் இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி ஆகும்.
 
இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்.
விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே - (நன்னூல், 153) (மேவலது - அடையாதது.)
தாமரை + பூத்தது = தாமரை பூத்தது
 
பொன் + மலை = பொன் மலை
 
கதவு + திறந்தது = கதவு திறந்தது
விகாரப் புணர்ச்சி நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
1. தோன்றல் விகாரம்
 
2. திரிதல் விகாரம்
  
3. கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் - (நன்னூல், 154)
மொழி - சொல்
 
மூ இடத்தும் - சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும்.
தோன்றல் விகாரம் இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.
பூ+கொடி = பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
 
யானை+கொம்பு = யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
 
ஆ+பால் = ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது)
திரிதல் விகாரம் இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
பொன்+குடம் = பொற்குடம் (நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது)
 
முன்+நிலை = முன்னிலை (வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது)
 
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இன்னோர் எழுத்தாகத் திரிதல் உண்டு.
 
பொன்+தாமரை = பொற்றாமரை (நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.)
கெடுதல் விகாரம் இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும். (கெடுதல்-மறைதல்)
மரம் + நிழல் - மரநிழல் (நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.)
 
மேலே கூறப்பட்ட மூன்று விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் அமையும் இரு சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என நன்னூலார் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆறு + பத்து =அறுபது இதில் நிலைமொழியின் முதலில் உள்ள ஆ என்னும் நெட்டெழுத்து அ என்னும் குற்றெழுத்தாகத் திரிந்தது. வருமொழியின் இடையில் உள்ள த் என்ற மெய் கெட்டது.
 
ஒரே புணர்ச்சியில் பல விகாரங்கள் இரு சொற்கள் சேர்ந்துவரும் ஒரு புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்றுவகை விகாரங்களில் ஒரே ஒரு விகாரம் மட்டும் அல்லாமல் இரண்டு விகாரமோ, மூன்று விகாரமோ கூட வரப்பெறும் என்கிறார் நன்னூலார்
ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப்பெறுமே - (நன்னூல், 157)
புணர் = புணர்ச்சி
 
1. யானை + கொம்பு - யானைக் கொம்பு இதில் தோன்றல் விகாரம் மட்டும் வந்தது.
2. மரம் + பெட்டி - மரப்பெட்டி 
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஒன்பது - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.
 
தமிழ் இணையக் கல்விக்கழகம்.
 
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? அ.கி.பரந்தாமனார்.