PDF chapter test TRY NOW

பூட்டுவிற்பொருள்கோள்
 
விற்பூட்டுப் பொருள்கோள், பூட்டுவிற் பொருள்கோள் என இரு வகையாகவும் இதனைக் குறிப்பிடுவர்.
 
செய்யுளைச் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் உள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்வது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.
 
வில்லில் கயிறு கட்டப்படும்.
 
அவ்வாறு கட்டும்போது வில்லின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டு வந்து வில்லின் மேற்பகுதியில் இணைப்பர்.
 
அதுபோல் செய்யுளின் கடைசி அடியின் இறுதியில் உள்ள சொல்லை
 
அதன் முதல் அடியில் முதலில் உள்ள சொல்லோடு கொண்டுவந்து
 
சேர்த்துப் பொருள் கொள்வது, பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.
 
சான்று
 
திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்
மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் -
உறந்தையர்கோன் தண்ணார மார்பில்
தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு - முத்தொள்ளாயிரம்
 
இப்பாடலைச் சொற்கள் உள்ள வரிசை முறையிலேயே பொருள் கொண்டால்,
 
‘தீமைகளை வெளிவரச் செய்யுங்கள்’ என்பதாகப் பொருள்படும். இப்பாடலின் இறுதியில் உள்ள கதவு என்னும் சொல்லை இச்செய்யுளின் முதற் சொல்லாகச் சேர்த்துப் பொருள் கொள்ளும் போது இப்பாடலின் சரியான பொருள் கிடைக்கிறது.
 
அதாவது ‘கதவைத் திறந்து விடுங்கள். திறக்காவிட்டால் உறந்தையின் மன்னனைக் காணாமல் பெண்கள் இறந்துவிடும் பெரும் துன்பம் ஏற்படும்.’ என்பது அப்பாடலின் பொருள்.
 
கதவு என்னும் சொல்லைச் செய்யுளின் முதலில் கொண்டு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே இப்பொருள் கிடைக்கும்.
எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள் பொருள்நோக்கு உடையது பூட்டுவில் ஆகும் - நன்னூல் - 415
தாப்பிசைப் பொருள்கோள்
 
தாம்பு என்னும் சொல் தாப்பு என வந்துள்ளது.
 
தாம்பு என்பதற்குக் கயிறு என்பது பொருள்.
 
இங்கு ஊஞ்சல் எனப் பொருள்படுகிறது.
 
இசை என்றால் சொல் என்பது பொருள்.
 
ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர்.
 
சான்று
  
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. - குறள் - 255
 
இக்குறளில் சொற்கள் அமைந்துள்ளவாறு பொருள் கொண்டால், ‘உணவு உண்ணாமல் ஒருவன் இருந்தால் உயிர் நிலைக்கும்’ என முதல் தொடர், பொருள்படும்.
 
இக்குறளின் நடுவில் உள்ள ஊண்  என்னும் சொல்லை இக்குறளின் முன்னும் பின்னும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
 
அதாவது ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு’ எனப் பொருள் கொள்வது குறளின் நோக்கத்திற்கு ஏற்ற பொருள் கொள்வதாக அமையும்.
இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும் நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை - நன்னூல் - 416