PDF chapter test TRY NOW

நம் அன்றாட வாழ்வில், நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். நமக்கு இம்மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது, அது எவ்வாறு வேலை செய்கிறதென என்றாவது அறிந்து இருக்கிறோமா?
 
மின்சாரம் இல்லாத ஒரு நாளை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அறிமுகம்
மின் மூலங்களைப் பற்றி அறியும் முன்பு ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள்! ஒரு ஊரில் சீனிவாசன் எனும் ஒரு சிறுவன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். கோடை விடுமுறையைக் கழிக்க, தங்கள் மாமாவின் ஊருக்குச் சென்றான். அங்கு அவனது மாமா, மாலை  ஐந்து மணிக்கு மேல் மின்விளக்கு போட்டார். அதை கவனித்துக்கொண்டிருந்த சீனிவாசன் தனது மாமாவிடம் மின்பொத்தனை அழுத்தியவுடன் எவ்வாறு மின்விளக்கு ஒளிர்கிறது எனக்கேட்டான். அதற்கு, அவர் அவனை அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அங்கு நடைபெற்ற உரையாடலைக் கீழே பார்க்கலாம்.
 
சீனிவாசன் : ஐயா, வணக்கம் என்  பெயர் சீனிவாசன், நான் தமிழ் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு  மின்சாரம் தொடர்பான சில ஐயங்கள் உள்ளன. அவற்றை, உங்களிடம் கேட்கலாமா ?
 
பொறியாளர்: தாராளமாக கேட்கலாம், தம்பி !
 
சீனிவாசன் : எவ்வாறு நாம் மின் பொத்தானை அழுத்தும்போது மின்விளக்கு ஒளிர்கிறது?
 
பொறியாளர்: மின்சாரம் தான் காரணம் .
 
சீனிவாசன்: நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது?
 
பொறியாளர்: நாம் அனல் மின்நிலையம்நீர் மின்நிலையம்கடலலை, காற்றாலை மற்றும் சூரியஒளி போன்றவற்றிலிருந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம்.
 
சீனிவாசன்: இந்நிலையங்கள் எல்லா இடங்களிலும் உள்ளனவா, ஐயா?
 
பொறியாளர்: இல்லை. இடத்தின் தன்மையைப் பொறுத்தே நாம் மின்நிலையங்களை அமைக்கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழகத்தின் நெய்வேலியில் அதிக அளவு பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அங்கு அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்டுள்ளளது.
 
சீனிவாசன்: ஆம் ஐயா. நான் ஒரு முறை திருநெல்வேலிக்கு அருகில் காற்றாலைகளைப் பார்த்திருக்கிறேன்.
 
பொறியாளர்: ஆம். ஏனெனில், அங்கு மலைப்பகுதியில் காற்று தொடர்ந்து வீசும்.
 
சீனிவாசன்: தங்களின் மேலான தகவலுக்கு நன்றி ஐயா!
 
பொறியாளர்: நன்றி தம்பி!
 
சீனிவாசன்: மாமா இம்மூலங்களிலிருந்து மட்டும்தான் மின்சாரம் கிடைக்கிறதா? மாமா! அக்கடிகாரத்தைப் பாருங்கள். அது எவ்வாறு இயங்குகிறது?
 
மாமா: ஆம், அது இயங்குவதற்கு மின்னாற்றல் தேவைப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மூலங்களைத்தவிர, நாம் மின்னாற்றலை மின்கலன்கள் மற்றும் மின்கல அடுக்குகளிலுருந்தும் பெறுகிறோம்.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின் மூலங்கள் எனப்படும். பலவகையான மின் மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.